நீண்ட நாள் பிரம்மச்சாரிக்கு பெண் கிடைத்தால், அதுவும் லட்சணமான பெண் கிடைத்தால் என்ன ஆகும்? கூட்டம் பிய்த்துக்கொண்டு போகும் இல்லையா? அதுமாதிரிதான் இருந்தது சமீபகாலமாய் நேர்முகத்தேர்வுகளுக்கு வருகிற கூட்டத்தைப்பார்த்தால்!

ஒரு விஷயத்தில் மகிழ்ச்சி என்றாலும் (பின்னே? போட்டியில்லாமல் வெற்றி பெற்றால் சுவாரஸியமில்லையே!) இன்னொரு பக்கம், பெரிய கேள்விக்குறி! 2-3 வருடங்கள் மிகுந்த அனுபவம் உள்ளவர்களின் எண்ணிக்கையே இவ்வளவு அதிகம் என்றால், தற்பொழுதுதான் முடித்துவிட்டு வருகிறவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட லட்சக்கணக்கில் இருக்கும் இல்லையா (பொறியியல் + பிற கணினி பட்டதாரிகள்)? அவர்களுக்கெல்லாம் வேலை எங்கிருந்து?
நான் சென்றது ஒரு பன்னாட்டு நிறுவனம். எதிர்பாராமல் வந்த பெரிய கூட்டத்தை எதிர்கொள்ளமுடியாமல் திண்டாடினர். காலையில் 9 மணிக்கு சென்ற என்னை முதல் சுற்றுக்கு அழைக்கப்பட்டது மாலை 6 மணிக்கு!!!
* * * * * * * * * * * * * *
யாரடி நீ மோகினி படத்தில் ஒரு சிறு தவறு!

கருணாஸ்-ஐ விட்டு நயன்தாராவிடம் தன் காதலை சொல்லச்சொல்வார் தனுஷ். கருணாஸ் பயந்துபயந்து கால் பண்ணுவார். நயன்தாரா எடுத்து பேசுவார். இரு பக்கமும் காட்டப்படுகிற இந்தக்காட்சியில், கருணாஸ் மற்றும் தனுஷ் இருக்கும் பகுதி நன்றாக இரவுபோல இருட்டியிருக்கும். ஆனால், நயன்தாரா பகலில்தான் பதிலளிப்பார். சரி இதையாவது பாவம் விட்டுவிடுவோம், ஒரு பெரிய படத்தில் ஒரு தவறு தெரியுமா?
* * * * * * * * * * * * * *
2012 படமும் சுனாமித்தவறும்

நிஜமாகவே மிரட்டியிருந்தார்கள் உண்மையைப்போலவே! இமயமலை-சுனாமி காட்சி திகிலை உண்டாக்கியது.. எங்கே போனாலும் துரத்தும் நாய்குட்டிபோல ஒரு பூகம்பக்குட்டி(!) விடாமல் துரத்துகிறது. ஹைதியை உலக அழிவின் ஆரம்பமாக கூட பயந்துகொண்டு பார்ப்பார்கள். ஹைதி சம்பவம் ஒரு போராயுதமாக இருக்குமோ என்று சந்தேகிக்கிறார்களாம் என்று ஒரு பதிவர் எழுதியிருந்தார்.
இவ்வளவு துல்லியமாக பண்ணியிருக்கிறவர்களின் கண்களுக்கு இந்த சிறிய தவறு தெரியாமல் போனது ஆச்சரியம்.. கடலில் அலைகள் தோன்றும் இடங்களில்தான் சுனாமியின் பாதிப்பு அதிகமாக இருக்கும். நடுக்கடலில் அலைகள் இல்லை! அதனால் சுனாமியின்போது (நடுக்)கடல்மட்டம் சற்றே உயர்ந்து இறங்கும் அவ்வளவுதான். அந்தசமயங்களில், கப்பல் இருந்தாலும் கவிழாமல் உயர்ந்து பின் இறங்கும். புரட்டிபோடாது!
* * * * * * * * * * * * * *
அய்யகோ இந்த சென்னை ஆட்டோக்காரர்கள்
சென்னை வந்தகாலத்திலிருந்து, பெரும்பான்மையான ஆட்டோக்காரர்களின் மீதுள்ள பொதுவான மதிப்பீடுகளான அடாவடிக்காரர்கள், ஏமாற்றுக்காரர்கள், அதிகம் வசூலிக்கிறவர்கள் ஆகியவை மாறாமல் அப்படியே இருக்கிறது. போனவாரம், திநகரிலிருந்து, பெரியார்பாதைக்கு பதில், பெரியார் ரோடு என்று ஒரு இடத்தில் இறக்கிவிட்டு, அடாவடியாகப்பேசி காசும் வாங்கிச்சென்றார் ஒரு ஆட்டோக்காரர். அப்புறம் எங்கிருந்து நல்லமதிப்பு வரும்?
அதையும்மீறி சிலர் இருக்கிறார்கள், ராமாபுரத்திலிருந்து வரும் திருக்குறள் ஆட்டோ. சைதையில் இவரை அடிக்கடி பார்க்கலாம். ஆட்டோ முழுவதும் தினம் தினம் ஒரு குறள், அதன் பொருள், நாலடியார், எல்லாம் எழுதிவைத்திருப்பார்.

மற்றொருத்தர், தனக்கு ஒரு வலைப்பக்கம் வைத்துள்ளார். அவருடைய தளம் இங்கே. நல்ல உழைப்பாளியான இவருக்கு நிறைய (வெளிநாட்டு) வாடிக்கையாளர்கள் உண்டு. இவருடைய சேவையை புரிந்துகொண்டு நண்பர்களானவர்கள்தான் இவருக்கு வலைதளம் வடிவமைத்து, ஒரு மடிக்கணினியும் கூட வாங்கிக்கொடுத்துள்ளார்கள். சென்னைக்கு வருவதற்கு முன் மின்னஞ்சலில் தெரிவித்துவிட்டால், இவர் அவர்களின் வருகைகளுக்காக தயாராக இருப்பார். படித்தது பள்ளிக்கல்வி வரைதான் என்றாலும், வாடிக்கையாளர்களுக்காக ஆங்கிலம் பேசக்கற்றுகொண்டிருக்கிறார். தொலைதூர பயணத்திற்கு மீட்டர் போடுவது என்பது இவருடைய ஸ்பெஷாலிட்டி. மீட்டர் பற்றி யாராவது மற்ற ஆட்டோக்காரர்களை கேட்டுப்பாருங்கள்.. உங்களை அவதார்(வேற்றுக்கிரகவாசி) ரேஞ்சுக்கு மேல்கீழ் பார்ப்பார்கள்.
* * * * * * * * * * * * * *